இளையராஜா: அதீத உற்பத்தித் திறன் கொண்ட அசாத்திய மேதை
நண்பர்களுடனான அன்றாட உரையாடல்களில் ஏதேனும் ஒரு புள்ளியில் இளையராஜா வந்து விடுகிறார். “இந்தப் படத்தில் இப்படி ஒரு பாடலை இளையராஜா உருவாக்கியிருக்கிறார். கேட்டிருக்கிறீர்களா?” என்று அவ்வப்போது பரிமாறிக்கொள்ளப்படும் அரிய பாடல்கள், இளையராஜாவின் தீவிர ரசிகர்களுக்கே வியப்பூட்டுபவை. “இந்தப் பாடலை இதுவரை கேட்டிராமல் இருந்துவிட்டோமே” என்றோ, “இந்தப் பாடலின் நுட்பத்தைக் கவனிக்கத் தவறிவிட்டோமே” என்றோ மெலிதான குற்றவுணர்வை ஏற்படுத்திவிடக்கூடியவை.
அப்படியான உரையாடல் ஒன்றின்போது, “இளையராஜாவை எந்த வரையறைக்குள்ளும் எளிதாக அடக்கிவிட முடியாது” என்று ஒரு நண்பர் சொன்னார். எந்த ஒரு மேதையைப் பற்றியும் பொதுவாகச் சொல்லப்படும் வார்த்தைகள்தான் இவை. ஆனால், ராஜாவைப் பொறுத்தவரை இந்த வார்த்தைகள் கூடுதல் அடர்த்தியும், கனமும் கொண்டவை. அந்த அளவுக்குப் பன்முகத்தன்மையுடன் தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தியவர் இளையராஜா. ஒரே நேரத்தில் வெவ்வேறு திசைகளில் பரவும் காற்றைப் போல, ஒரே காலகட்டத்தில் வெவ்வேறு பாணியிலான இசை வடிவங்களை, இசைக்கோர்வைகளை அதனதன் உச்சம் தொட்டு நிகழ்த்திக் காட்டியவர் அவர்.
கண்ணதாசன் கடைசியாக எழுதிய ‘கண்ணே கலைமானே’ பாடல் தொடர்பாக ஒரு பேட்டியில் குறிப்பிட்ட இளையராஜா, அந்தப் பாடல் பதிவு செய்யப்பட்ட நாளில் மேலும் இரண்டு பாடல்களைத் தன்னுடைய இசையில் கண்ணதாசன் எழுதினார் என்று குறிப்பிடுகிறார். ஒன்று ‘கூந்தலிலே மேகம் வந்து’ (பாலநாகம்மா), இன்னொன்று ‘நெற்றிக்கண்’ படத்தில் இடம்பெற்ற ‘ராஜா ராணி ஜாக்கி…’ பாடல்.
மூன்றும் வெவ்வேறு சூழலுக்கானவை, வெவ்வேறு உணர்வுகளைச் சுட்டுபவை. வெவ்வேறு நிறங்களைக் கொண்டவை. குறிப்பாக, ‘ராஜா ராணி ஜாக்கி’ பாடலின் முகப்பு இசை அதிநவீனத் தன்மை கொண்டது. குவென்டின் டாரன்டினோ அறிமுகப்படுத்தும் அலட்சியமான அதிரடி நாயகன் ஒருவனுக்கான தீம் இசைக்கு நிகரானது. இந்தப் பன்முகத் தன்மைதான் இளையராஜாவின் தனிச் சிறப்பு.
Comments
Post a Comment